Skip to main content

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் - நாவல் - எம்.ஏ.சுசீலா

 

நூல்அறிமுகம்                                 

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ – பேரா.எம்..சுசீலாவின் மூன்று தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்லிடும் நாவல்

பேரா.பெ.விஜயகுமார்

பேரா.எம்..சுசீலா மதுரை பாத்திமா கல்லூரி தமிழ்த்துறையில் முப்பதாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வூக்குப்பின் எழுத்துப் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு ஏராளமான கதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதி வருகிறார். ரஷ்ய எழுத்தாளர் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின்குற்றமும், தண்டனையும்’, ’அசடன்’, உள்ளிட்ட பதினோரு நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புத் திறனுக்காக கனடா இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கும் ஜி.யூ.போப் விருது ஆகியன பெற்றுள்ளார். சமூகச் செயற்பாட்டாளரான சுசீலாசிறந்த பெண்மணிவிருது பெற்றுள்ளார். ’யாதுமாகிநாவல் ‘Devi the Boundless’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘கனலி’, ’சொல்வனம்போன்ற இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்என்ற இவரின் மூன்றாவது நாவல் குடும்ப உறவுகள் குறித்த ஆழ்ந்த விவாதத்தை மேற்கொள்கிறது. குடும்பம், பொதுவாழ்வு ஆகிய இரு தளங்களும் ஒன்றுக்கொன்று முரணானதா? இரண்டிலும் வெற்றிகரமாகப் பயணிக்க முடியாதா? பொதுவாழ்வில் தீவிரமாகப் பணியாற்றி சமூகம் மெச்சும் நபர்களாக ஆண்களால் வலம்வர முடிகின்ற போதிலும் பெண்களுக்கு அத்தகு வாழ்வு ஏன் சாத்தியப்படுவதில்லை? ஏதேனும் ஒரு துறையில் ஆர்வம், அர்ப்பணிப்பு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் குடும்பத்தையும் தக்கவைத்துக்கொண்டு ஆண்களால் செயல்பட முடிகிறது. ஆனால் ஒரு பெண்ணால் அவ்வாறு செயல்பட முடியாமல் போவது எதனால்? இத்தகு கேள்விகளை எழுப்பும் இந்நாவல் வாசகர்களை விடைகாணத் தூண்டுகிறது.

மகப்பேறு மருத்துவர் காயத்ரியை சிறந்த மருத்துவராக, மருத்துவ ஆய்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக நாவலின் ‘மீரா’ எனும் முதல் பகுதியில் காண்கிறோம். மருத்துவத் தொழிலை பணம் சம்பாதிக்கும் தொழிலாகப் பார்க்காமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாகச் செய்து வருகிறார். உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளால் பிள்ளைப் பேறின்றித் தவிக்கும் தம்பதியர்களுக்கு மருத்துவ வழியிலான தீர்வைக் கொண்டு பிள்ளைபெற உதவுகிறார். கருவியல்துறையில் (Embryology) தீவிர ஆய்வை மேற்கொள்கிறார்.

குழந்தைப் பேறின்றித் தவிக்கும் சுமதி-ஈஸ்வரன் தம்பதியினர் டாக்டர் காயத்ரியின் உதவியை நாடி வருகின்றனர். In vitro Fertilization எனும் முறையில் (கருவை வெளியில் சோதனைக் குழாயில் உருவாக்கி பின்னர் அதை தாயின் கருப்பையில் வைத்து பத்து மாதங்கள் கழித்துப் பிள்ளை பெறுகின்ற முறை) குழந்தையைப் பெற்றெடுக்கும் வழிமுறையை தம்பதிகளுக்கு காயத்ரி முன்மொழிகிறார். பல ஆண்டுகளாகப் பிள்ளைப் பேறின்றித் தவித்து வரும் அந்த தம்பதிகள் அதற்குச் சம்மதிக்கின்றனர். டாக்டர் காயத்ரிக்கு அந்த முறையைக் கையாள்வது முதல் அனுபவமாக இருக்கிறது. அதனால் மிகுந்த மெனக்கெடலுடன் கண்ணும் கருத்துமாக இருந்து அவர் அந்த முயற்சியில் வெற்றியடைகிறார். சோதனைக்குட்பட்ட சுமதியின் பொறுமை, அவளுடைய பெற்றோரின் நம்பிக்கை ஆகியவையே வெற்றிக்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன. தங்களுடைய நீண்டநாள் குறைக்குத் தீர்வு தந்த டாக்டர் காயத்ரியின் பெயரைத் தங்கள் மகளுக்கு சூட்டி மகிழும் பெற்றோர் அவளை மீரா எனச் செல்லமாக அழைக்கின்றனர்.

மீரா என்ற காயத்ரி படித்து மருத்துவராகிறார். மருத்துவர் காயத்ரியின் பெருமைகள் பற்றி அறிந்திருந்த மீரா அவரைச் சந்திக்க விரும்புகிறார். மீரா பிறந்த அந்த மருத்துவமனை இப்போது பாழடைந்து கிடக்கிறது. டாக்டர் காயத்ரியின் இருப்பிடம் அறிய முடியாது கலங்குகிறார் மீரா. பயன்பாடின்றிக் கிடக்கும் அந்த மருத்துவமனையை விலைக்கு வாங்கி, புதுப்பித்து அவ்விடத்தில் காயத்ரியைப் போன்று தன்னலமற்ற மருத்துவராகத் தான் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறார். அந்த மனையை வாங்க வேண்டும் என்று அவர் நினைத்த அதே வேளையில், அந்த மனையை விற்பதற்காக அமெரிக்காவிலிருந்து வருகிறார் மருத்துவர் காயத்ரியின் பேத்தி தாரா. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். மருத்துவமனையை மீரா வாங்கிக் கொள்வதும், தாரா விற்பதும் சிரமங்கள் ஏதுமின்றி எளிதாக முடிகிறது. அடுத்ததாக தன் பாட்டி காயத்ரியைப் பார்க்கப் புறப்படும் தாராவுடன் மீராவும் சேர்ந்து கொள்கிறார். தான் போற்றி வரும் மருத்துவர் காயத்ரியைச் சந்திக்கும் வாய்ப்பு தாராவின் மூலம் கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார் இளம் மருத்துவரான மீரா என்ற காயத்ரி.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தன்னைக் காணவரும் தாரா மருத்துவர் மீராவையும் உடன் அழைத்து வருவது அந்தப் பாட்டியை ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறது. இங்கிருந்து துவங்குகிறது நாவலின் காயத்ரிஎனும் இரண்டாம் பாகம். In Vitro Fertilization (IVF) முறையைக் கடைப்பிடித்து தான் அடைந்த வெற்றியின் சாட்சியாக தனக்கு முன்னால் நிற்கும் மீராவைப் பார்த்துப் பரவசம் அடைகிறார் மருத்துவர் காயத்ரி. மீராவின் பெற்றோர் இறந்த  செய்தி கேட்டு அவர் வருத்தம் கொள்கிறார். அன்று தான் பெற்ற வெற்றிக்கு மீராவின் தாய் சுமதியும், தந்தை ஈஸ்வரனுமே காரணம் என்று சொல்லி தனது மன நிறைவை மீராவிடம் வெளிப்படுத்துகிறார்.

மீரா அங்கிருந்து விடைபெற்றுச் சென்றதும், பாட்டிக்கும், பேத்திக்குமிடையே சுவையான உரையாடல் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் தன் பாட்டியுடன் தங்கும் சுட்டிப் பெண் தாரா பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விடை காண்கிறார். ஒரு திரில்லரைப்போல நாவல் சுவாரசியமாகச் செல்லத் துவங்குகிறது.

தன்னுடைய பழைய மருத்துவமனையை பாழடைய விட்டுவிட்டு குற்றாலம் அருகில் பண்பொழிவுஎனும் இயற்கை அழகு கொழிக்குமிடத்தில் இலவச மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மனையை மருத்துவர் காயத்ரி கட்டிவந்திருப்பதன் புதிரென்ன என்று புலன்விசாரணை நடத்துகிறார் பத்திரிகையாளரும், பேத்தியுமான தாரா. நாவலின் முதல் பகுதியில் நடந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை இரண்டாம் பகுதியில் வெளிக்கொணர்கிறார் பேத்தி தாரா.

டாக்டர் காயத்ரியின் குடும்ப வாழ்வில் நிகழும் சோகங்கள் படிப்பவர் நெஞ்சை நெகிழச் செய்கின்றன. மருத்துவத் தொழிலை மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கிய காயத்ரிக்கு தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏதும் இருந்திடவில்லை. மருத்துவம் பார்ப்பது, மருத்துவத் துறையில் ஆய்வு செய்வது என்று அவரது வாழ்வு தங்குதடையில்லாமலே சென்றது. மருத்துவ தொழில் மீது காயத்ரிக்கு இருந்த அதீத ஆர்வத்தை மருத்துவரான அவரது கணவர் தினகரனாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. மனைவியின் அறிவியல் ஆராய்ச்சியை மெச்சிப் புகழ்ந்து ஆதரவளிக்க அவர் ஒன்றும் பியர் கியூரி இல்லையே!. அவர் ஒரு சாதாரண மருத்துவராக மட்டுமே நடந்துகொள்கிறார்.

தன்னுடைய கனவுகளுக்கு எதிராக இருக்கும் கணவரைவிட்டுப் பிரிகிறார் காயத்ரி. குழந்தை வித்யாவுடன் தனது பெற்றோர்களிடம் அடைக்கலமாகிறார். தன்னுடைய பெற்றோர்கள் வித்யாவைக் கவனித்துக்கொண்ட காரணத்தால் மீண்டும் மருத்துவமனையிலேயே பொழுதும் உழைக்கிறார். அன்பு மகள் வித்யாவிடம் பாசத்தைப் பொழிகிறார். ஆனால் மகள் வித்யாவும் தந்தையைப்போலவே தன் தாயின் கனவுகளைப் புரிந்துகொள்ளவில்லை. அம்மா- மகள் உறவில் விரிசல் ஏற்படுகிறது. மகளுக்கும், பேத்திக்கும் இடையிலான விரிசலைச் சரி செய்ய காயத்ரியின் பெற்றோர் எவ்வளவோ முயற்சி செய்தும் உடைந்த மனங்கள் ஒன்று சேர முடியாமலே போகிறது.

பள்ளிப்படிப்பின் இறுதியில் நிறைய மார்க்குகள் வாங்கி மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றிருந்தபோதிலும் மருத்துவம் படிக்கமாட்டேன் என்று வித்யா பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். பெங்களூர் கல்லூரியில் சேர்ந்து எம்.எஸ்சி படித்து முடித்ததும் உன் அம்மா வித்யா திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாள்என்று பழைய கதையைச் சொல்லிமுடித்த காயத்ரியை இதெல்லாம் பத்தாது பாட்டி! கிளினிக்கை மூடியதற்கான சரியான காரணம் இன்னும் உங்களிடமிருந்து வெளிவரவில்லை பாட்டி! அந்த வைட்டல் பாயிண்ட் இன்னும் மிஸ்ஸிங் பாட்டி!”, என்று மடக்குகிறாள் பேத்தி தாரா. கைதேர்ந்த பத்திரிகையாளர் தாராவை வெல்ல முடியாமல் தவித்த பாட்டி மேலும் தொடர்கிறார்.

”ஒரு சமயம் கோபத்தின் உச்சத்தில் உன் அம்மா என்னிடம் ஊரெல்லாம் உங்களை ஆராய்ச்சி என்ற பெயரில் பணத்தைப் பறிக்கும் டாக்டர் என்றுதானே பேசுகிறது’ என்று கூறியதும் என் பெற்றோரும், நானும் திகைத்துப் போனோம். தவமாக நினைத்து நான் ஆற்றி வந்த பணியை எனது மகளே பிசினஸ்எனக் கொச்சைப்படுத்திய கணத்தில்தான் மருத்துவமனையை மூடிவிட்டு இங்கே வந்து சேவையைத் தொடங்குவது என முடிவெடுத்தேன்என்று பேத்திக்குப் போதிய விளக்கம் கூறுகிறார் காயத்ரி பாட்டி.

ஓவ்வொரு சிருஷ்டியும் ஏதோ ஒரு நோக்கத்துக்காகத்தான் இந்த மண்ணுக்கு வந்து சேருகிறது. நீ அதைச் சரியாகக் கண்டுபிடிச்சிருக்க, உன் பிறவி நோக்கத்திற்கு உண்மையாகவும் இருந்திருக்க. இது லட்சத்தில் ஒரு சிலருக்குத்தான் சாத்தியம்என்ற என் அம்மாவின் வார்த்தைகளே மனமுடைந்து போயிருந்த எனக்கு ஆறுதலைக் கொடுத்தன என்று பேத்தியிடம் சொல்லி முடிக்கிறார் காயத்ரி. “உங்க அம்மா சொன்னது கரெக்ட்தான் பாட்டிம்மா. அதைப் புரிஞ்சுக்காமபோன எங்கம்மா சார்பிலே என்னோடஅப்பாலஜீஸ்என்று சொல்லி பாட்டியைக் கட்டிப்பிடிக்கிறாள் தாரா என்று நாவல் முடிகிறது.

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்....’ என்ற நாவலின் தலைப்பு மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் நான்காம் பகுதியான போற்றித் திருஅகவலில்இடம் பெற்றுள்ளது. ‘அஞ்சு திங்கள் முஞ்சுதல் பிழைத்தும்எனும் வரி ஐந்தாம் மாதத்தில் தாய்க்கு ஏற்படும் உணவு ஒவ்வாமையால் (மசக்கை) மெலிவுற்ற கரு மீண்டு வருவதைக் குறிக்கிறது. எம்..சுசீலாவின் இந்நாவலை மகப்பேறு மருத்துவர் ஆண்டாள் பாஸ்கரின் அணிந்துரையுடன் Her Stories பதிப்பகம் வெளியிட்டுள்ளது.                  -----------------------------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...