பூமணி
கரிசல் மண்ணின் ஏழை எளிய மக்களின் வாழ்வு துயரமானது. அது வறுமையும், வெக்கையும் பின்னிப்பிணைந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடாத அம்மக்களின் போராட்ட வாழ்வைப் பலரும் எழுத்தோவியமாகத் தீட்டியுள்ளனர். கரிசல் மண்ணின் வாசத்தையும், பாசத்தையும், நேசத்தையும் இயல்பாகச் சித்தரித்துச் சென்றுள்ள பூமணி இவர்களில் முக்கியமானவர். பூமணி கதைகளில் கரிசல் காட்டு மனிதர்கள் மட்டுமின்றி அங்கு நிலைபெற்றிருக்கும் கல், மண், மரம், செடி, கொடி, புழு, பூச்சி என்று அனைத்தும் இடம் பெறுகின்றன. தமிழ்ச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் சாதியத்தையும் அதன் கோர வடிவத்தையும் பூமணி சொல்லிச் செல்லும் விதம் வித்தியாசமானது. சாதியம் நிகழ்த்திடும் வன்முறைகளை தன் புனைகதைகளில் நாசுக்காகவும், நுட்பமாகவும், அதேசமயம் அழுத்தமாகவும் பதிவு செய்கிறார்.
கூட்டுறவுத் துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றிய பூமணி இலக்கியத்திலும் பரிணமித்துள்ளது. தமிழ் எழுத்துலகிற்குக் கிடைத்த பேறு. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள இவரின் ‘அஞ்ஞாடி’ நாவல் கரிசல் மண்ணின் இருநூறு ஆண்டுகால வரலாற்றைப் புனைகதையாக மாற்றியுள்ளது. ‘பிறகு’, ’வெக்கை’, ’நைவேத்தியம்’ ஆகியவை பூமணியின் பிற நாவல்களாகும். தலித் வாழ்வியலைச் சித்தரிக்கும் ‘பிறகு’ தமிழின் உன்னதமான நாவல்களில் ஒன்றாகும். தீப்பெட்டித் தொழிலாளர்களின் அவலங்களை மையப்படுத்திய ‘கருவேலம்பூக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பூமணி திரைப்படத் துறையிலும் தடம் பதித்துள்ளார். இலக்கிய சிந்தனைப் பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க விருது போன்ற விருதுகள் பூமணிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள்.
சிறுகதை இலக்கியத்தின் நுட்பங்கள் அனைத்தும் பூமணியிடம் இயல்பாகவே அமைத்துள்ளன. பூமணியின் கதைகளுக்கு அழகு சேர்ப்பது அவர் பயன்படுத்தும் மொழியாகும். உயிர்ப்பான கரிசல் வட்டார மொழியில் அந்த மண்ணின் கதை சொல்லப்படும்போது அது ஒரு வீரியமிக்க படைப்பாகிறது. ‘ரீதி’ எனும் கதையில் கரிசல் காட்டில் குழந்தைகள் வறுமையோடு மல்லுக்கட்டி வாழும் வாழ்க்கையை பூமணி சொற்சித்திரமாக வரைந்துள்ளார். வறட்சி என்றால் அப்படியொரு வறட்சி! வயிற்றுப் பசியுடன் மூன்று சிறுவர்கள் அந்த கந்தகப் பூமியில் ஆடு மேய்க்கிறார்கள். ஆட்டுக்குத் தண்ணீர் காட்டக்கூட முடியாத அளவிற்கான பஞ்சம். பனைமரத்தில் ஏறி அணிலை வேட்டையாடி சூட்டான் போட்டு தின்று பசியாறுகிறன்றனர். அவர்களின் கவனம் சிதறவும் ஆடுகள் மிளகாய்ச் செடிகளை மேயச் செல்கின்றன. அதற்கான தண்டனையாக ஒரு சிறுவன் சாட்டையடி வாங்குகிறான். அவர்களின் பொழுதெல்லாம் வாழ்விற்கான கடும் போராட்டத்திலேயே கழிகின்றது.
‘கோலி’ வறுமையின் காரணமாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு புலம் பெயரும் சுப்பு எனும் சிறுவனின் கதையாகும். சிறுவயதில் தந்தையை இழந்த சுப்பு, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரத்த நகரத்துக்கு வந்தடைகிறான். கிராமத்து நண்பர்களையும். விளையாட்டுகளையும் பிரிந்தது சுப்புவை மிகவும் வாட்டுகிறது. கட்டுப்பாடுகளற்ற சுதந்திரத்துடன் ஓடி விளையாடிக் கழித்த கிராமத்து நாட்களை நினைத்து ஏங்குகிறான். கால்சட்டைப் பையில் தயாராக வைத்திருக்கும் இரண்டு கோலி குண்டுகளையும் வைத்து விளையாட வழியின்றி தவிக்கிறான். அவன் அம்மாவும், அக்காவும் பகலெல்லாம் தீப்பெட்டி ஒட்டியும், இரவில் இட்லிக்கடை வைத்தும் வறுமையைப் போக்க அல்லாடுகிறார்கள். இவனும் அவர்களுக்கு ஒத்தாசையாக வேலைகள் செய்கிறான். ஓய்வு கிடைத்த ஒரு நேரத்தில் கோலி விளையாடச் சென்ற அந்தக் கணமே அவனுக்கு எமனுடனான சந்திப்பாய் முடிகிறது. கோலி குண்டுவை விரட்டிச் சென்ற சுப்பு லாரியில் அடிபட்டுச் சாகிறான். அவன் தலை மட்டும் பெரிய கோலியாக தெருவில் தனித்துக் கிடந்தது என்று கதை முடிவது சோகத்தின் உச்சம்.
சாதிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்விடங்களாக இந்தியக் கிராமங்கள் இருக்கின்றன. பூமணியின் ‘மட்டம்’ சிறுகதையில் புளியம்பட்டி எனும் கிராமத்தில் அந்தந்த சாதியினர் அவர்களுக்குரிய இடத்தில் கோட்டைத் தாண்டாமல் வாழ்கிறார்கள். நாயக்கமார், நாடாக்கமார், கோனக்கமார் எல்லாம் ஊரின் மேற்கிலும், பள்ளக்குடியும் சக்கிலியக்குடியும் ஊரின் கிழக்கிலும் வாழ்கின்றனர். தெற்கு வடக்காக ஊரின் நடுவே செல்லும் சாலை இவர்களைப் பிரித்துவைக்கும் எல்லைக் கோடாகும். மேற்கில் வாழும் ஆதிக்க சாதியினரின் அக்கிரமங்களை விதிப்பயன் என்றெண்ணி பொறுத்துக் கொண்டு எல்லையை மீறாமல் வாழ்ந்த காலம் பழைய கதையாகிறது. பள்ளக்குடியைச் சேர்ந்த பெரியவர் சுப்பன் எல்லைக்கோடு மீறாமல் இருக்க படாதபாடு படுகிறார். ஆனால் புதிய தலைமுறை பள்ளக்குடி இளைஞர்கள் எழுச்சி பெற்று அத்துமீற நினைக்கிறார்கள். எல்லைக் கோட்டைக் கடக்க எத்தனிக்கிறார்கள். பிரச்சனை வெடிக்கிறது. குத்து, வெட்டு, கைகலப்பு, என்றாகி காவல்நிலையத்தை முற்றுகை இடுகின்றனர், காவல்நிலைய ஏட்டு கள யதார்த்த நிலைமைகளை விளக்கித் தீர்ப்பு வழங்குகிறார். இரு தரப்பினரும் தீர்ப்பை ஏற்று அமைதியுடன் கலைகிறார்கள். கிராமங்களில் நிலவிடும் சாதியப் பாகுபாடுகளை பூமணி வன்மங்களற்ற மொழியில் சித்தரிக்கிறார். கிராமத்தின் மேற்கு. தெற்கு ஆகிய இரு வாழ்விடங்களின் மட்டமும் சமமாகும் போதுதான் கிராமத்தில் அமைதி நிலவிடும் என்பதைக் கதை உணர்த்துகிறது.
பூமணியின் அடி, தகனம், ஆத்திரம், மட்டம் குடை, நாதி ஆகிய கதைகளில் வரும் ஏட்டையாவும், காவலர் ஆத்தியப்பனும் கருணையுள்ளம் கொண்ட இரண்டு மனிதநேயம் மிக்க நேர்மையான காவலர்களாகத் திகழ்கின்றனர். ‘ஆத்திரம்’ சிறுகதை அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு என்ற பேரில் காவல்துறையினர் படும்பாட்டைச் சித்தரிக்கிறது. அதிலும் காவல்துறையின் கீழ்மட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் பணிநிலை படுமோசமாக இருப்பதைப் பார்க்கிறோம். அமைச்சருக்கு பாதுகாப்பாம்! சென்னை கடற்கரை ரோட்டில் ஏட்டையா மணிக்கணக்காக நிற்கிறார். காலை வெயிலில் கனத்த துப்பாக்கியுடன் கால்கடுக்க நிற்கிறார். போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் போது பொதுமக்களின் கோபத்திற்கும் ஆளாகிறார். வெறுமனே டீயை மட்டும் குடித்துவிட்டு பசியுடன் நிற்கிறார். பாவம், ஏட்டையா! சிறுநீர் கழிப்பதற்குக்கூட வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் நடக்கும் விபத்தைச் சரியாகக் கையாளவில்லை என்று மேலதிகாரியின் திட்டுக்கும் ஆளாகிறார். இவ்வளவு சிரமங்கள் அனுபவித்த பின்னர் அமைச்சர் மாற்று வழியில் சென்றுவிட்டார் என்பதால் காவலர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு என்ற பேரில் நடந்திடும் இக்கொடுமை என்று தீரும்? எட்டையா மட்டுமல்ல பொதுமக்களாகிய நாமும் கேட்கிறோம். பூமணியின் கதாபாத்திரங்கள் சதையும், ரத்தமுமான உயிரோட்டமுள்ள மனிதர்கள். தாங்கள் வாழும் கரிசல் மண்ணின் மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் பேசும் வார்த்தை மென்மையானவை மட்டுமல்ல ஆழமானவையுங்கூட. பூமணியின் கதைகள் அனைத்திலும் கரிசல் மண்ணின் சோசகம் ஊடாடிச் செல்கிறது.
பெ.விஜயகுமார்
செல்: 9500740687
-----------------------------------------------------------
Comments
Post a Comment