Skip to main content

திலீப்குமார் - சிறுகதைகள் - ஓர் அறிமுகம்

 

திலீப்குமார்

தமிழகத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஏழு கோடியாகும். இதில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் சுமார் ஒரு கோடிப்பேர். இதேபோல் மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, இந்தி, பெங்காலி, பஞ்சாபி என்று பல மொழி பேசுபவர்களும் வாழ்கின்றனர். இவர்களில் சிலர் தமிழில் நன்கு தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்களாகவும் இருப்பது நமக்குப் பெருமை சேர்ப்பதாகும். எழுத்தாளர் சுகுமாறனின் தாய்மொழி மலையாளம்; நஞ்சுண்டனின் தாய்மொழி கன்னடம் இதுபோல் திலீப்குமாரின் தாய்மொழி குஜராத்தி. தமிழின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளரான திலீப்குமார் சிறுகதைகள் மட்டுமின்றி மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்குகிறார். தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக திலீப்குமாரின் 88 சிறுகதைகளின் தொகுப்பினை சுபஸ்ரீ கிருஷ்ணசாமி ஆங்கிலத்தில் கொண்டுவந்துள்ளார்.

திலீப்குமாரின் மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. கணையாழி இதழில் வெளிவந்ததீர்வுசிறுகதை இலக்கிய சிந்தனையின் பரிசு பெற்றது. அமெரிக்காவாழ் தமிழர்களின் விளக்கு விருது, ஒன்றிய அரசின் பாஷா விருது, ஆரோக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது ஆகியன பெற்றுள்ளார். தமிழ் இலக்கியம் குறித்து கலிபோர்னியா, யேல், சிகாகோ பல்கலைக்கழகங்களில் உரையாற்றி உள்ளார். ‘மௌனியுடன் கொஞ்ச நேரம்’, ‘வெங்கட்சாமிநாதன்வாதங்களும் விவாதங்களும்போன்ற விமர்சன நூல்களையும் எழுதியுள்ளார். திலீப்குமாரின்ரமாவும் உமாவும்என்ற குறுநாவல் தமிழில் ஓரினக் காதலைப் பேசிய தமிழின் முதல் புனைவிலக்கியமாகும்.

வணிகத்தில் சிறந்து விளங்கும் குஜராத்தியர்கள் உலகெங்கிலும் பரந்து விரிந்து வாழ்கின்றனர். சென்னை மாநகரின் தங்கச்சாலை, பாரிமுனை ஆகிய பகுதிகளில் குஜராத்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் சிலர் பெருவணிகர்களாக மிகுந்த வசதிகளுடன் வாழ்ந்த போதிலும், பெரும்பான்மையோர் நடுத்தர வர்க்கத்தினரே. இவர்களது வாழ்வின் நெருக்கடிகளையும், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விவேகத்தையும் திலீப்குமார் தன் சிறுகதைகளில் காட்சிப்படுத்துகிறார். இவரது கதைகளின் ஊடே வெளிப்படும் நகைச்சுவை அலாதியானது.

கடவுகதையில் வரும் கங்குப் பாட்டி திலீப்குமாரின் காத்திரமான கதாபாத்திரங்களில் ஒருவர். எழுத்தாளர்களின் கதாபாத்திரங்களில் ஒரு சிலர் மிகை வளர்ச்சி பெற்று வாசகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகின்றனர். அத்தகைய அற்புதமான படைப்புகளில் ஒருவர்தான் இந்த கங்குப் பாட்டி. இளம் வயதில் விதவையாகி வாழ்வின் அனைத்து அவலங்களையும் அனுபவித்தவர். கங்குப் பாட்டி தன்னுடைய சோகங்களை எல்லாம் மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு எந்நேரமும் நகைச்சுவை உணர்வு மிளிர்ந்திட வாழ்கிறார். திலீப்குமாரின் பல சிறுகதைகளின் களமாக சென்னையின் மின்ட் பகுதிலிருக்கும் ஏகாம்பரேஸ்வர் அக்ராகரமும் அதிலிருக்கும் இருபத்து நான்கு ஒண்டிக் குடித்தனங்களும் இருக்கின்றன. அக்ராகரத்தில் வாழும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரின் அன்புடனும், ஆதரவுடனும் கங்குப் பாட்டி தன் இறுதிக் காலத்தைக் கழிக்கிறார். சாவின் விளிம்பிற்கு அடிக்கடி சென்றாலும், அதிலிருந்து தப்பித்து வந்துவிடுவார். தூரத்து உறவினர் ஒருவரின் அரவணைப்பில் வாழ்ந்திடும் கங்குப் பாட்டியின் காமரசம் பொங்கிடும் பேச்சு அக்ராகரத்தில் உள்ள அனைவரையும் ஈர்த்தது. திருமணமான இளம் பெண்கள் அனைவரும் கங்குப் பாட்டியிடம்தான் தாம்பத்யம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றனர். திருமணம் ஆகாத வாலிபப் பெண்களும் தாம்பத்ய வாழ்வின் ரகசியங்களை கங்குப் பாட்டி சுவைபடச் சொல்வதைக் கேட்டு மகிழ்வர். ஏகாம்பரேஸ்வர் அக்ராகரத்தில் இருப்பவர் யார் இறந்தாலும் ரஜ்னிகாந்த் என்பவர்தான் குஜராத்தி முறைப்படி பாடைகட்டி அவர்களின் இறுதிப் பயணத்தை நடத்தி வைப்பார். கங்குப் பாட்டிக்கும் தானே பாடைகட்டி வழியனுப்ப வேண்டும் என்பதே அவரின் விருப்பம். ஆனால் அவர் ஊரில் இல்லாத ஒரு நாள் அவருக்கு இந்த வாய்ப்பைக் கொடுக்காமலே கங்குப் பாட்டி இறந்துவிடுகிறார். மரணம் சொல்லிக்கொண்டா வருகிறது!

சிறுகதையின் இலக்கணங்களில் ஒன்றான எதிர்பாராத முடிவைக் கொண்டதாக திலீப்குமாரின் ‘தீர்வு’ கதை இருக்கின்றது. இக்கதையின் களமும் ஏகாம்பரேஸ்வர் அக்ராகரம் தான். அக்ராகரத்தில் வாழும் குஜராத்தியர்களின் நடை, உடை, பழக்க வழக்கங்களை இக்கதையில் திலீப்குமார் அழகுறச் சித்தரிக்கிறார். ஒரு நாள் அக்ராகரத்தின் குடிநீர் வசதிக்கு ஆதாரமான கிணற்றில் எலி செத்து மிதக்கிறது. அக்ராகரமே அல்லோகலப்படுகிறது. பல மணி நேர முயற்சிக்குப் பிறகு எலியை ஒருவழியாக கிணற்றிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். இப்போது அடுத்த பிரச்சனை எழுகிறது. எலி செத்து மிதந்த கிணற்றுத் தண்ணீரை எப்படி பயன்படுத்தவது? பலரும் பல ஆலோசனைகளைச் சொல்கின்றனர். கிணற்றிலிருந்து பத்து இருபது வாளித் தண்ணீரை இறைத்து வெளியே விட்ட பின்னர் நீரைப் பயன்படுத்தலாம் என்கிறார் ஒருவர். உடனே சிலர் வாளி வாளியாகத் தண்ணீரை இறைத்து வெளியேற்றுகின்றனர். சிறிது குளோரின் தூவி விட்டால் போதும் தண்ணீர் சுத்தமாகிவிடும் என்கிறார் ஒருவர். அருகிலிருக்கும் ஹெல்த் ஆபிசுக்குச் சென்று முறையீடு செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் வருகிறது. செய்வதறியாது அனைவரும் திகைத்து நின்ற அத்தருணத்தில் அக்ராகரத்தில் வாழும் கங்குப் பாட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் எளிய தீர்வை வழங்குகிறார். தன்னுடைய அலமாரியைத் திறந்து சிறு மண்குடத்தை எடுக்கிறார். ஒரு சிறு கிண்ணத்தைக் கொண்டுவரச் சொல்லி ஆணையிடுகிறார். குடத்திலிருந்த தண்ணீரில் கொஞ்சத்தைக் கிண்ணத்தில் ஊற்றுகிறார். இந்த கங்கா ஜலத்தை கிணற்றில் ஊற்றுங்கள் கிணறு சுத்தமாகிவிடும் என்கிறார். பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கிறது. சிறிது நேரத்தில் கிணறு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது.

‘கடிதம்’ கதையில் ஏகாம்பரேஸ்வர் அக்ராகரத்தில் மரணத்தை வேண்டி நாளும் எமதர்மனை வணங்கிய வண்ணம் மற்றுமொரு ஜீவன் காத்திருக்கிறது. மிட்டு மாமா எனும் பெரியவர் வறுமையும், நோயும் வாட்டி வதைக்க சாவு வந்திடாத என்று ஏங்கிக் கிடக்கிறார். அவருடைய இரு மகன்களும், அவர்களின் தர்மபத்தினிகளும்  அவரை அக்கறையுடன் கவனிப்பதில்லை. அவ்வப்போது உடுமலையில் இருக்கும் தன் சட்டகர் கன்ஷியாம் என்பவருக்கு கடிதம் எழுதி பண உதவி பெறுவார். மிட்டு மாமா நூறு ரூபாய் பணம் கேட்டுக் காத்திருக்கும் போது உடுமலையிலிருந்து தந்தி வருகிறது கன்ஷியாம் இறந்துவிட்டார் என்று. மரணத்தின் வாசல் திறக்கும் வரை மனிதர்கள் காத்திருக்கத்தான் வேண்டும். யார் முந்துவார்; யார் பிந்துவார் என்பது விடை தெரியாத புதிர்தானே.

                              --பெ.விஜயகுமார்.

                              செல்: 9500740687

                     ---------------------------------------------

Comments

Popular posts from this blog

சங்கப் பெண் கவிதைகள் - சக்தி ஜோதி

நூல் அறிமுகம் சங்கப் பெண் கவிதைகள் ஆசிரியார் ; சக்தி ஜோதி வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை . விலை : ரூ .400/- சங்க இலக்கியம் சின்னஞ்சிறு பாடல்களில் இயற்கை அழகையும் , அன்பின் மிளிர்வையும் , வாழ்வியல் அறத்தையும் பொதிந்து வைத்திருக்கும் கவிதைச் சுரங்கம் . சங்க இலக்கியத்தின் தொன்மை குறித்து பெருமைப்படுகிறோம் . சங்க இலக்கியப் பாடல்கள் வாழ்வியல் களஞ்சியம் , வரலாற்றுப் பெட்டகம் , உணர்வியல் அதிசயம் என்று வியக்கிறோம் . ஆனால் நமக்கு சங்க இலக்கியத்துடனான பரிச்சயம் எந்தளவிற்கு இருக்கிறது ? பள்ளிகள் , கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பதற்கென்று ஒரு சில சங்கப் பாடல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன . அவைகள் வெறுமனே சடங்காகச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . சங்க இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள அவைகள் போதுமானவைகள் அல்ல . தொழிற்கல்விக்கான பயிற்சி பள்ளிக்கூடங்களிலேயே துவங்கிவிடுவதால் தமிழ்ப் பாடம் குறித்த அக்கறை மாணவர்கள் . பெற்றோர்கள் , பள்ளி நிர்வாகம் என்ற முத்தரப்பிற்கும் இல்லாமல் போய்விடுவது பேரவலம் . மொழிப் பாடங்களை விடுத்து மற்ற பாடங்களில் கவனம் செலுத்துமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட...

இரண்டம் ஜாமங்களின் கதை - சல்மா

                                                         இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா   சல்மாவின் ” இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் படித்துப் பரவசம் அடைந்தேன் . இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலை மிக அழகாகச் சித்தரித்துள்ளார் . ஆணாதிக்கம் கோலோச்சும் அனைத்து இந்தியச் சமூகங்களிலும் பெண்கள் சுதந்திரங்கள் ஏதுமின்றி இறுக்கமான சூழலில்தான் வாழ்கிறார்கள் . அதிலும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்வு மேலும் இருண்மையானதாக இருப்பதை நாவல் வெளிப்படுத்துகிறது . எத்தனை சிக்கல்களுக்கும் , சிரமங்களுக்கும் இடையில் தங்களுக்கென்று வாய்க்கப் பெற்ற வாழ்வை முழுமையுடன் வாழ்ந்திடவே மனித மனம் விரும்புகிறது . வாழ்வின் மீதான இந்நம்பிக்கையையே சல்மாவின் கதை மாந்தர்களும் பிரதிபலிக்கிறார்கள் . இருப்பினும் அவர்களுக்கான நஸீப் வேறுவிதமாக அமைந்...

Resurrection novel by Leo Tolstoy - An Introduction

      நுல் அறிமுகம்: ”செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடும் ஒரு கனவானின் கதை”-லியோ டால்ஸ்டாய் எழுதிய நாவல்,   புத்துயிர்.(Resurrection). --பெ.விஜயகுமார்.                       ரஷ்யாவின் மிகச் சிறந்த புனைகதை எழுத்தாளராகக் கொண்டாடப்படும் லியோ டால்ஸ்டாய் (1828-1910) ரஷ்யாவில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நிறைய சிறுகதைகள், War and Peace (1869) Anna Karenina (1878) Resurrection (1899) போன்ற புகழ் பெற்ற நாவல்கள் எழுதி இலக்கிய உலகில் நட்சத்திரமாக மின்னுகிறார்.   ’Resurrection’ என்ற பெயரில் இங்கிலாந்திலும் ‘Awakening’ என்ற பெயரில் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்ட இந்நாவல் அதே நேரத்தில் மேலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறித்துவ மதத்தில் இருந்த ’டியுகோபர்’ எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார். ரஷ்ய மரபுவழி திருச்சபை இப்பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்க...