அம்பை, பெண்ணிய நோக்கின் முன்னோடி!
அம்பை எனும் புனைப்பெயரில் எழுதிவரும் சி.எஸ்.லட்சுமி தமிழ் இலக்கியத்தில் பெண்ணிய நோக்கின் முன்னோடி. புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வரலாற்றாசிரியர். மும்பையில் வசிக்கும் அம்பை, பெண்கள் பற்றிய ஆய்வுக்கான ஆவண மையத்தை (Sound and Picture Archive for Research on Women- SPARROW) நடத்தி வருகிறார். பெண்கள் வரலாறு மற்றும் வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது பரிமாணங்களைப் பெற்று வருகிறது. அம்பையின் சிறுகதைகள் பெண்ணிய நோக்கில் அதே சமயம் பிரச்சார வாடையின்றி, அழகியலோடு எழுதப்பட்டவைகளாகும். எழுச்சி பெற்றுவரும் பெண்ணினத்தின் முக்கியக் குரலாக அறியப்படும் அம்பை சமீபத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.
அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ ஓர் அரிய படைப்பாகும். பெண்களின் உலகு ஆண்களின் உலகிலிருந்து எவ்வளவு மாறுபட்டுள்ளது என்பதைச் சித்தரிக்கிறது. நாள்தோறும், நாள் முழுவதும். சமையல் அறையில் அடைபட்டுக் கிடப்பதே பெண்களுக்கு வாழ்க்கை என்றானதாகும். அவர்களின் ஓய்வில்லாத வேலைக்குக் கூலியும் இல்லை. மதிப்பும் இல்லை. “நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” எனும் கந்தர்வர்னின் கவிதை வரிகள் உண்மையில் வைர வரிகளே! ஆண்களைத் திருப்திபடுத்துவதையே வாழ்வின் நோக்கமாகக் கொள்ளாமல் இருந்திருந்தால், பெண்கள் ஒருவேளை மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவாகியிருக்கலாம். அனைத்துத் துறைகளிலும் பரிணமித்திருக்க முடியும்.
சிறுகதை இலக்கியத்தில் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களும் ஆண் எழுத்தாளர்களைப் போன்றே ஒரு நூற்றாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையவர்கள் என்கிறார் இலக்கியத் திறனாய்வாளர் இரா.பிரேமா. இந்த வரலாற்றை நான்கு கட்டங்களாகப் பிரித்து வை.மு.கோதைநாயகியின் காலகட்டம், லட்சுமியின் காலகட்டம், ராஜம் கிருஷ்ணனின் காலகட்டம், இறுதியாக அம்பையின் காலகட்டம் என வரையறுக்கிறார் இரா.பிரேமா. அம்பையின் காலகட்டத்தில் சிவகாமி, தமயந்தி, பாமா, அனுராதா, அனாமிகா, அமரந்தா போன்ற பெண் எழுத்தாளர்கள் எழுச்சியுடன் எழுதி வருகின்றனர். அம்பையின் காலகட்டத்தில் எழுதி வரும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் வீரியமிக்கதாக உள்ளன என்பதும் இரா.பிரேமாவின் மதிப்பீடு. இதோ! அம்பையின் இத்தகு வீரியமிக்க சிறுகதை ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை”!
இச்சிறுகதையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஒரு பப்பாஜியின் குடும்பத்தைச் சந்திக்கிறோம். பப்பாஜி தன் மனைவி ஜீஜி, விதவையான அவரின் பெரியம்மா படி ஜீஜி, மருமகள்கள் என்ற பெண்கள் படைசூழ வாழ்கிறார். ஆனால் கடைசி மருமகள் மீனாட்சி மட்டும் சற்றே வித்தியாசமாக வருகிறாள். வீட்டில் இருக்கும் ஆண்களைத் திருப்திப்படுத்துவதே இவர்கள் வாழ்வின் லட்சியமாகும். வீட்டின் மூலையில் இருக்கும் சமையலறையில்தான் இவர்கள் பொழுதையெல்லாம் கழிக்கிறார்கள். ஆனால் அந்த சமையலறை காற்றும், வெளிச்சமும் அற்ற மிகச் சிறிய அறை. பெண்கள் நாலாபுறமும் கம்பிகள் எழுப்பிய உலகில் புகுந்து கொண்டு, அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகளை எடுத்தனர். பேடி அதிகாரம்! என்று அம்பை அதனைப் பகடி செய்கிறார்.
ஒரு தாய் தன் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுப்பதெல்லாம் “சமையலறையை ஆக்கிரமித்துக்கொள்; அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே… இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம் என்பது” என்கிறார். ”முப்பது பேர் வீட்டில் அஞ்சு கிலோ ஆட்டா மாவு பிசைவேன். முந்நூறு சப்பாத்தி இடுவேன். முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் இரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள் பட்டையில் குத்திக் குத்தி வலித்தது” என்று தன்னுடைய அனுபவத்தைக் கூறுகிறார் ஜீஜி. நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டவ் திரியை இழுத்து விடவேண்டும்; மண்ணெண்ணெய் கிடைக்கும் போது வாங்க வேண்டும்; மழைக்காலத்தில் கவலை அரிசி; மாங்காய் காலத்தில் ஊறுகாய்; வெய்யில் காலத்தில் அப்பளம்; பழங்கள் வரும் காலத்தில் ஷர்பத், ஜூஸ், ஜாம்; சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு; மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை, தள்ளிப் போகாவிட்டாலும் கவலை என்று இவைகளே பெண்களின் மண்டையில் அடைத்திருக்கின்றன. இவைகள் மட்டுமே வாழ்க்கை, அதிகாரம் என்று நினைத்திருந்த ஜீஜிக்கு அவள் மருமகள் மீனாட்சி வேறு உலகத்தையும், வேறு அதிகாரத்தையும் சுட்டிக்காட்டுகிறாள்.
“ஜீஜி! இந்தச் சமையலறை, அட்டிகை, வளையல், தங்கக்குண்டுச் சட்டி… இதிலெல்லாம் ஒரு பலமுமில்லை. அதிகாரம் அதிலிருந்து வரவில்லை. அது பப்பாஜியை ஒட்டிய அதிகாரம். இதிலிருந்தெல்லாம் விடுபடுங்கள்”. என்று வேண்டுகிறாள். இதிலிருந்தெல்லாம் விடுபட்டிருந்தால், பெண்களும் ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்; புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம்; கைலாய பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம்; போர்கள், சிறைகள், தூக்கு மரங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கியிருக்கலாம் என்ற அரிய
உண்மையை அந்த வீட்டின் கடைசி மருமகள் மீனாட்சி எடுத்துரைக்கிறாள் என்று கதை முடிகிறது.
-----------------------------------------------------------------------------------
Comments
Post a Comment